|
கத்திக் கப்பல் - திரை விமர்சனம்
Oct 11,2008 00:00
by
admin
முன்னாள் அமைச்சரை காட்டுக்கு கடத்துகிறான் வீரய்யன். அவரை மீட்பதற்காக ரூ.3 கோடி தரப்படுகிறது. திடீரென்று வீரய்யனும் அவனுடன் வந்த டாக்டர் பிரேமும் சுட்டுக்கொல்லப்பட்டதாக செய்தி வருகிறது. இந்நிலையில் காட்டுப்பகுதிக்கு வரும் அனூப்குமார், 'இறந்து போன டாக்டர் பிரேம் நான்தான்' என்று அதிர வைக்கிறார். அதைக்கேட்டு டாக்டரின் மனைவி மீரா அதிர்ச்சி அடைகிறார். அனூப்குமார் நாடகமாடுகிறார் என்று சந்தேகப்படும் போலீஸ் அதிகாரி சந்திரபோஸ், அவரை பின்தொடர்கிறார். ஆனால் வீரய்யன் மறைத்து வைத்திருக்கும் கோடிக்கணக்கான பணத்தை அபேஸ் செய்ய சந்திரபோஸ் போடும் திட்டம் வெட்ட வெளிச்சமாகிறது. அதன் முடிவே கிளைமாக்ஸ். காட்டுப் பகுதியில் வீரப்பன் மறைத்து வைத்திருந்த பணத்தை மையமாக வைத்து கதை சுழன்றிருக்கிறது. 'வீரய்யனுடன் நேர்மையான டாக்டர் பாரிவள்ளளும் (பிரேம்) கொல்லப்பட்டார்' என்று சொல்லும்போது உற்சாகமில்லாமல் தொடங்கும் கதை, அடுத்த நிமிடம் ரத்தகாயங்களுடன் ஓடிவரும் அனூப்குமார், 'நான்தான் இறந்துபோன டாக்டர் பாரிவள்ளல்' என்று உரிமை கொண்டாடியதும் நிமிர வைக்கிறது. 'இவர் என் கணவர். திருமணம் ஆன பிறகு தனது பெயர் பாரிவள்ளல் என்று கூறுகிறார். அவரை எப்படியாவது மீட்டு தாருங்கள்' என்று கிராமத்தில் தஞ்சம் புகும் பூர்ணிதா சஸ்பென்சுக்கு துணை நிற்கிறார். அவ்வப்போது காட்டு பங்களாவில் வரும் சத்தத்தைகேட்டு மிரளும்போது நம்மையும் மிரள வைக்கிறார். காட்டுக்குள் பதுக்கப்பட்ட பணத்தை அபேஸ் செய்ய வந்திருப்பதாக அனூப்பும், பூர்ணிதாவும் பேசிக்கொள்ளும்போது பேய் பயத்திலிருந்து கிடைக்கிறது விடுதலை. நேர்மையான அதிகாரி சந்திரபோஸ் போலீஸ் கெட்டப்பில் மிரட்டுகிறார். அவர்தான் பணத்தை கொள்ளையடிக்க வந்த கூட்ட தலைவன் என்ற உண்மை தெரியும்போது ஷாக். பிரேமை சுட்டுக்கொன்ற சந்திரபோஸ் கூட்டத்தை, துப்பாக்கி முனையில் பழி தீர்த்து படத்தை முடித்து வைக்கிறார் மீரா வாசுதேவன். தலையை சுற்றி மூக்கை தொட்டிருக்கிறார் டைரக்டர். ஒரே கதையில் பேய் மிரட்டல், பழிக்குப்பழி, வீரப்பன் கதை என ஏகத்துக்கு கிளைக்கதைகளை நுழைத்து குழப்புவது மைனஸ். காட்டுப்பங்களாவில் மின் இணைப்பு கிடையாது என்று சொல்லிவிட்டு பளீர் வெளிச்சத்தில் காட்சிகளை அமைத்திருப்பதும் இடிக்கிறது.
|