|
'நாயகன்' - திரை விமர்சனம்
Aug 31,2008 00:00
by
admin
பள்ளி மாணவிகளுக்கு மயக்க மருந்து கொடுத்து கடத்தும் ஆனந்தராஜ் கும்பல், அவர்களை வி.ஐ.பி.களுக்கு விருந்தாக்குகிறது. இதை வீடியோவில் பதிவு செய்யும் டாக்டர் ஸ்ரீமனை, ஆனந்தராஜ் கும்பல் துரத்துகிறது. அவரது மனைவி சங்கீதா, குழந்தையை கடத்திச் சென்று மிரட்டுகிறது. தொலைபேசியில் ரமணாவிடம் பேசும் சங்கீதா தன்னையும் குழந்தையையும் காப்பாற்ற சொல்கிறார். முதலில் மறுத்தாலும் பிறகு முயற்சியில் ஈடுபடுகிறார். அதேசமயம் என் கவுண்டர் போலீஸ் ரித்தீஸிடமும் தகவல் சொல்கிறார் ரமணா. தேடுதல் வேட்டை தொடங்குகிறது. ரித்தீஸ் ஒரு பக்கமும், ரமணா மறுபக்கமும் நடத்தும் தாக்குதலில் ஆனந்தராஜ் கூட்டம் நிலைகுலைகிறது. ஸ்ரீமன் குடும்பம் பாதுகாப்பாக மீட்கப்படுவதே கிளைமாக்ஸ். விறுவிறுப்பு, மசாலா, சென்டிமென்ட் என படத்தை பரபரக்க வைத்திருக்கிறார் டைரக்டர் சங்கீதாவின் குழந்தையை ஆனந்தராஜ் கடத்துவதும், உடைந்த போனை ஒட்ட வைத்துகொண்டு குழந்தையை காப்பாற்ற சொல்லி ரமணாவிடம் சங்கீதா கெஞ்சுவதும் படபடக்கும் காட்சிகள். அதுபோல் ஆட்களை கடத்தும் ஆனந்தராஜே ஒரு போலீஸ் அதிகாரிதான் என்ற அடுத்த சஸ்பென்ஸ் ஷாக். நரம்புத் தளர்ச்சியால் தள்ளாட்டம்போடும் இன்னொரு ஆனந்தராஜ் நடிப்பில் வெளுக்கிறார். சண்டை காட்சிகளில் அசத்தும் ரமணாவுக்கு அடுத்த கட்டம் ஆரம்பமாகியிருக்கிறது. சமூக பொறுப்புள்ள டாக்டராக ஸ்ரீமன், புதுமாப்பிள்ளை வையாபுரி, மாமா சந்தானபாரதி, சதுரங்க காய்களாக ராதாரவி, பாண்டியராஜன், விஜய்பாபு நிறைவு. மரியா மனோகர் இசை பரவாயில்லை. அபுஷாவின் ஒளிப்பதிவு நயம். ஓபனிங் பில்டப் பாடல் தேவையில்லா திணிப்பு. ரமணாவை காதலிக்கும் கீர்த்தி சாவ்லா பாதியில் எங்கே போனார் என்று தெரியவில்லை. பாடல்கள் கேட்கும் ரகமென்றாலும் திரைக்கதைக்கு போடுகிறது வேகத் தடை. கிளைமாக்ஸை சினிமாத்தனமில்லாமல் யோசித்திருந்தால் நாயகன் இன்னும் ஜொலித்திருப்பார். -தினகரன் விமர்சனக் குழு-
|