‘குசேலனால் ரூ.40 கோடி நஷ்டம்' தியேட்டர் அதிபர்கள் போர்க்கொடி
Aug 18,2008 00:00 by admin

 

"குசேலன்" படத்தால் ரூ. 40 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதை தயாரிப்பாளர்கள் கே. பாலசந்தர், செவன் ஆர்ட்ஸ் விஜயகுமார் திருப்பி தர வேண்டும் என தியேட்டர் உரிமையாளர்கள் கூறினர்.

கவிதாலயா, செவன் ஆர்ட்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்த படம் 'குசேலன்'. இதில் ரஜினி கவுரவ வேடத்தில் நடித்தார். இப்படம் ஆகஸ்ட் 18-ம் தேதி  திரைக்கு வந்தது. ரஜினி படம் என்பதால் அதிக விலை கொடுத்து தியேட்டர் உரிமையாளர்கள் படத்தை வாங்கினர்.

ஆனால் படம் எதிர்பார்த்த அளவு ஓடவில்லை. இதனால் தமிழகம் முழுவதிலிருந்தும் தியேட்டர் உரிமையாளர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இந்த விவகாரத்தில் ரஜினி தலையிட வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு திரைப்பட தியேட்டர் அதிபர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆர். பன்னீர் செல¢வம், காஞ்சிபுரம்-திருவள்ளூர் மாவட்ட தியேட்டர் அதிபர்கள் சங்கத் தலைவர் எஸ்.பி. பழனியப்பன் பத்திரிகையா ளர்களிடம் நேற்று கூறியதாவது:

'குசேலன்' படத்தில் எனது பங்கு 25 சதவீதம்தான் என ரஜினி கூறினார். ஆனால் படப்பிடிப்பு முடிந்து படம் திரைக்கு வரும் நேரத்தில், இது ரஜினி படம், அவர் படம் முழுக்க வருகிறார் என இயக்குனர் வாசு தெரிவித்தார். படத்தை திரையிட நாங்கள் வாங்கும்போதும் வாசு இதையே கூறினார்.

அதை நம்பி அதிக விலை கொடுத்து வாங்கினோம். தமிழகம் முழுவதும் 375 தியேட்டர்களில் படம் திரையிடப்பட்டது. பெரிய தியேட்டருக்கு ரூ. 30 லட்சத்திலிருந்து ரூ. 25 லட்சம் வரையும் சிறு தியேட்டருக்கு ரூ. 15 லட்சத்திலிருந்து ரூ. 10 லட்சம் வரையும் கொடுத்து படத்தை வாங்கினோம். இப்போது இந்த தியேட்டர்களில் மொத்தமாக ரூ. 40 கோடிக்கு எங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

ரஜினி நடித்த படங்களிலேயே பெரிய அளவில் தியேட்டர் அதிபர்களுக்கு நஷ்டம் ஏற்படுத்தியிருப¢பது 'குசேலன்' படம் தான். 'பாபா' கூட இந்த அளவுக¢கு நஷ்டத்தை தரவில்லை. அதுக்கே ரஜினி எங்களுக்கு பணத்தை திருப்பி தந்தார்.

இம்முறை பல தியேட்டர் அதிபர்களுக்கு 90 சதவீதமும் சிலருக்கு 60 சதவீதமும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே கவிதாலயா, செவன் ஆர்ட்ஸ் நிறுவனங்கள் நஷ்டத்தை ஈடு கட்ட வேண்டும். ரஜினி தலையிட்டால் மட்டுமே இது நடக்கும். எனவே அவர் இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும்.

படத்தின் தோல்விக்கு முக்கிய காரணம், இது ரஜினி படம் இல்லை என்பதுதான். ரஜினி படத்துக்கு பல நாட்கள் தியேட்டரில் டிக்கெட் கிடைக்காது. இப்படம் திரைக்கு வந்த இரண்டாவது நாளிலேயே தியேட்டர்கள் காலியாக இருந்தன.

படத்துக்கான நஷ்டத்தை திருப்பி தராவிட்டால் கவிதாலயா, செவன் ஆர்ட்ஸ் தயாரிக்கும் படங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க மாட்டோம். அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆகஸ்ட் 23ம் தேதி சென்னையில் அனைத்து தியேட்டர் அதிபர்களும் கலந்து ஆலோசிக்க உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

காஞ்சிபுரம்-திருவள்ளூர் மாவட்ட தியேட்டர் அதிபர்கள் சங்க செயலாளர் பி. கண்ணப்பன், பொருளாளர் ஆர். சுந்தர் உடனிருந்தனர்.