நான் போட்டியிடுவதை தடுக்க முயற்சி: ராதிகா
Jun 26,2008 00:00 by admin

 

 தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் ஜூலை 6ம்தேதி நடக்கிறது. இதில் ராமநாராயணன், பஞ்சு அருணாசலம் தலைமையிலான 2 அணிகள் மோதுகின்றன.

 

ஜனநாயக முற்போக்கு அணி சார்பாக போட்டியிடும் பஞ்சு அருணாசலம் தலைமையிலான நிர்வாகிகள் நேற்று வேட்பு மனுக்கள் தாக்கல் செய்தனர்.

தலைவர் பதவிக்கு பஞ்சு அருணாசலம், துணைதலைவர்கள் பதவிக்கு ஏ.எம்.ரத்னம், அமீர், செயலாளர்கள் பதவிக்கு ராதிகா, கேயார், பொருளாளர் பதவிக்கு ராதாகிருஷ்ணன் போட்டியிடுகின்றனர்.

மனு தாக்கல் செய்த பின் பஞ்சு அருணாசலம் கூறியதாவது:

45 வருடமாக சினிமா துறையில் இருக்கிறேன். பல்வேறு பிரச்னைகளை சந்தித்திருக்கிறேன். பேசி தீர்த்திருக்கிறேன். சினிமா தயாரிப்பு இப்போது கோடிகளை தாண்டி போய்க்கொண்டிருக்கிறது. இதில் சிரமம் வந்தால் தயாரிப்பாளர் அழிய வேண்டிய நிலை உள்ளது. அதை முடிந்த வரை மாற்ற வேண்டும், சுயநலமில்லாமல் பாடுபட வேண்டும் என்பதற்காக போட்டியிடுகிறோம். தயாரிப்பாளர்கள் தலை நிமிர்ந்து நடக்க வேண்டும் என்பதற்காக நாங்கள் போட்டியிடுகிறோம்.

ராதிகா கூறுகையில், 'இந்த தேர்தலில் நீங்கள் நிற்கக்கூடாது என்று என்னை வற்புறுத்தினார்கள். ஏன் அப்படி செய்தார்கள் என்று தெரியவில்லை.

என் சொந்த படத்தையே ரிலீஸ் செய்வதற்கு, முன்பிருந்த சங்க நிர்வாகிகளால் உதவ முடியவில்லை. முதல்வர்தான் ரிலீஸ் செய்ய உதவினார். எனக்கே இந்த நிலை என்றால் மற்ற தயாரிப்பாளர்கள் பிரச்னையை எப்படி தீர்ப்பார்கள்?' என்றார்.

தயாரிப்பாளர்கள் கேயார், கே.ராஜன், ஹென்றி, ஏ.எம்.ரத்னம், கமீலா நாசர், தங்கர் பச்சான், ஜெயதேவி உள்பட பலர் உடனிருந்தனர்.