'காத்தவராயன்' - திரை விமர்சனம்
Jun 03,2008 00:00 by admin

 

 நடிப்பு: கரண், வடிவேலு, விதிஷா, ராதா, இளவரசு


தயாரிப்பு: சில்வர் ஜூப்ளி பிலிம்ஸ்.


இயக்கம்: சலங்கை துரை.


இசை: ஸ்ரீகாந்த் தேவா.

கள்ளச்சாரயம் காய்ச்சுபவன் திருந்தி, போதை மருந்து கடத்தும் கூட்டத்தையே
பிடித்துக்கொடுக்கும் கதை.

 

 

 


ஒகேனக்கல் பகுதியில் கள்ளச் சாரயம் விற்பவர் கரண். அந்த ஊருக்கு சமூக சேவை செய்ய வருகிறார் விதிஷா. குடிக்கு எதிராக பிரசாரம் செய்யும் அவரைக் கண்டாலே கரணுக்கு ஜிவ். இதை பயன்படுத்தி மற்றொரு சாராய வியாபாரி தண்டபாணி, கரணை போலீசில் மாட்டி விடுகிறார்.

குண்டர் சட்டத்தில் கைதாகும் கரண், சிறை தண்டனைக்கு பிறகு விதிஷாவை பழிவாங்க சென்னை வருகிறார். அவரோ போதை மருந்து கடத்திய குற்றத்துக்காக சிறை தண்டனை அனுபவிப்பதை பார்த்து சந்தோஷம் அடைகிறார். சதி திட்டம் தீட்டி தன்னை போதை மருந்து கடத்தலில் சிக்க வைத்த கும்பல் பற்றி கரணிடம் சொல்லி கதறுகிறார் விதிஷா. அவரை கரண் மீட்பது கிளைமாக்ஸ்.

தொடைக்கு மேல் தூக்கி கட்டிய வேட்டி, முறுக்கிய மீசையுடன் கள்ளச்சாராய வியாபாரியாக கரண் கச்சிதம். ஒரு சொட்டு டேஸ்ட் பார்த்து, சரக்கில் கிக் இருக்கிறதா, இல்லையா என்பதை சொல்லும் எக்ஸ்பர்ட். 'நாங்க பேட்டரியை போட்டு சாராயம் காய்ச்சல, ஆரோக்கியமான மூலிகையபோட்டு காய்ச்சுறோம்' என்று தனது சாராயத்துக்கு சர்டிபிகேட் தருபவர்.

காதல் தண்டபாணிதான் கரணுக்கு வில்லன் என்று எண்ணும்போது, நாயகி விதிஷா கரணை போலீசில் சிக்க வைப்பது திருப்பம். குண்டர் சட்டத்தில் கைதான கரண், விடுதலை ஆனதும் விதிஷா வீட்டுக்கு பழிவாங்கச் செல்ல, அவர் பெற்றோரோ 'எங்க பொண்ணு செத்துபோயிட்டா' என்று குண்டை தூக்கிப் போடுவது அதிர்ச்சி.

கார் விபத்தில் சிக்கிய கலெக்டரை காப்பாற்றும் கரண், பிறகு அவர் தரும் மரியாதையை கண்டு மனம் மாறுவது பொருத்தம். கள்ளச் சாராயத்தை எதிர்த்த விதிஷா, போதை மருந்துக்கு அடிமையானவர் என்பது திரைக்கதையின் பலமான முடிச்சு.

அவரை நிரபராதி என்று நிரூபிப்பதற்கு கரண் எடுக்கும் முயற்சிகள் விறுவிறுப்பு. நெஞ்சிலும், வயிற்றிலும் துப்பாக்கி தோட்டா பாய்ந்த பிறகும் ஹீரோ உயிருடன் வருவதென்பது கோடம்பாக்க சினிமா.

விதிஷா, கவர்ச்சியிலும், நடிப்பிலும் பாஸ் மார்க் வாங்குகிறார்.
சேலையை கோடு மாதிரி நெஞ்சில் சுற்றிக்கொண்டு கிக் ஏற்றும் ராதா, வந்த வேகத்திலேயே காணாமலும் போகிறார்.

வழக்கம்போல அடிவாங்கி சிரிப்பூட்டுகிறார் வடிவேலு. வாங்குவதை வாங்கிக்கொண்டு, மாட்டி விடுவதையும் செய்யும் போலீசாக, நிறம் மாறும் நடிப்பில் இளவரசு நச். ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் 'காத்தவராயா என்னை கடத்திகிட்டுபோயா' காதோர ரீங்காரம்.
ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியை ஒட்டு மொத்தமாக அள்ளி வந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் கார்த்திக் ராஜா.