'மதம் மாறவில்லை' - நக்மா பேட்டி
May 31,2008 00:00 by admin

 

 

 தொடர்ந்து பரபரப்பாகவே பேசப்படும் நடிகை நக்மா... நிறைய காதல் கிசுகிசுக்கள், தற்கொலை முயற்சி
என்ற செய்தி, கிறிஸ்துவ மதத்துக்கு மாறினார் என்று புது சர்ச்சை.

இப்படி தொடர்ந்து செய்திகளில்
அடிபட்டுக்கொண்டிருக்கும் நக்மாவிடம் கேட்ட சிக்கலான கேள்விகளுக்குக் கூட சிரிப்புடன் பதில்
சொல்கிறார்.

 

 

தொடர்ந்து உங்களைப் பற்றி கிசுகிசுக்கள் வந்து கொண்டே இருக்கிறதே?

``எங்கேயிருந்துதான் இந்த மாதிரி செய்திகள் கிளம்புதுன்னு தெரியலை. என்னைப்பற்றி நிறைய சர்ச்சைகள் தொடர்ந்து எழுதிகிட்டுதான் இருக்காங்க. ஆனா எதுக்குமே யாரும் எங்கிட்ட பதில் கேட்பது கிடையாது. நானும் மீடியாவுக்கு ரொம்ப பேட்டி கொடுத்ததில்லை. நான் பேசாம இருந்ததுனாலதான் என்னைப் பற்றி வரும் செய்திகள் உண்மைன்னு நினைச்சிடுறாங்க.''

சரி, தற்கொலை முயற்சி, மதம் மாறியது, மதப் பிரச்சாரம்.. இதுக்கெல்லாம் உங்க பதில்?

``தற்கொலை முயற்சி பண்ற அளவுக்கு கடவுள் எனக்கு எந்தக் கஷ்டமும் கொடுக்கலை... ஜீஸஸ் மேல நம்பிக்கை இருக்கு. அதுக்காக நான் மதம் மாறிட்டேன்னு சொல்ல முடியாது.

நான் முஸ்லிம் மதத்திலிருந்து மாறிட்டதா எழுதறாங்க. நான் அடிப்படையில் முஸ்லிம் பெண் அல்ல. அப்பா இந்து, அம்மா முஸ்லிம். நான் இந்துப் பெண்... என்னைப் பற்றி வரும் அடிப்படைச் செய்திகளே தப்பு.''

உண்மையில் மதம் மாறினீங்களா? இல்லையா?

``இல்லை! மதம் மாறலை!''

இந்த மாதிரி சர்ச்சைகளின்போது உங்க ஃபேமிலில என்ன சொல்றாங்க? ஜோதிகா உங்களை வந்து பார்க்கறாங்களா?

``ஜோ குழந்தையுடன் என்னைப் பார்க்க வந்துடுவாங்க. கொஞ்சகாலம் மும்பையில் தங்கிட்டுப் போவாங்க. ஒவ்வொரு முறை ஜோ வரும்போதும் அவளைவிட, மகள் தியாவைப் பார்க்கத்தான் காத்துக்கிட்டு இருப்பேன். ஸோ க்யூட். என் தங்கையின் குழந்தை அத்தனை அழகு, அழமாட்டாள். சிரிச்சுட்டே இருப்பாள். எல்லாரும் அப்படியே சூர்யா மாதிரி இருக்கிறதா சொல்றாங்க. ஆனா எனக்கு ஜோ மாதிரியும் இருக்கிற மாதிரி தெரியுது. வீட்ல குழந்தை இருந்தா பொழுதுபோறதே தெரியாது. நான் இப்போ தியாவுடன் ரொம்ப பிஸி.''
 
சூர்யா எப்படி? உங்கள் குடும்பத்துடன் பழகிவிட்டாரா?

``சூர்யாவைவிட சிறந்த கணவர் என் தங்கைக்குக் கிடைச்சிருக்க முடியாது. அவ்வளவு நல்லவர்! சூர்யா குடும்பமும் ஜோவை ரொம்ப மரியாதையாகவும், அன்பாகவும் நடத்தறாங்க. நான் போனாகூட நல்லா பார்த்துக்கிறாங்க. ரொம்ப மரியாதைக்குரிய குடும்பம். ஜோ ரொம்ப லக்கி!''

மறுபடியும் நடிக்க வரீங்க போல...பாலுமகேந்திரா படத்துல நடிக்கப்போவதாக நியூஸ் வருதே?

``பாலுமகேந்திரா அவருடைய கதைக்கு நான் சரியா இருப்பேன்னு என்னைக் கூப்பிட்டு கதை சொன்னாரு. எனக்கும் பிடிச்சிருந்தது. அவர் என்னை நடிக்கக் கூப்பிட்டதே எனக்குப் பெருமையா இருக்கு. இன்னும் உறுதியா எதுவும் முடிவாகலை. இந்த வாய்ப்புக்கு பிறகு நல்ல தமிழ்ப்பட வாய்ப்புகளை ஏத்துக்கலாம்னு இருக்கேன்.''

உங்க பர்ஸனல் வாழ்க்கை பற்றி கொஞ்சம் பேசலாமா?

``ம்ம்.. பேசுங்களேன்! எனக்கு பர்சனல்னு எதுவுமில்லை. நான் பிரபலம்ங்கிறதுனால என்னைப் பற்றி எல்லா விஷயங்களும் தெரிஞ்சுக்கணும்னு பொதுவா நினைப்பாங்க. அதுல ஒண்ணும் தப்பில்லை.''

nagma

சரத்குமார், கங்குலி, சமீபத்தில் ஒரு போஜ்புரி திரைப்பட நடிகர் இப்படி பலருடன் நீங்கள்
கிசுகிசுக்கப்பட்டீர்கள். ஆனால் எதுவுமே நீடிக்கவில்லை. ஏன்? என்ன பிரச்னை?

``நீங்க சொல்ற யாருடனும் ரிலேஷன்ஷிப் இருந்திருந்தாதானே பிரேக் ஆவதற்கு... இவங்க என் வாழ்க்கையில் நான் சந்திச்ச ஆண்கள் அவ்வளவுதான்.

என் பிரச்னையே இதுதான். எப்பவும் எல்லோருடனும் என்னை இணைச்சு எழுதிடுறாங்க. எனக்கு என்னமோ நிறைய ஆண்கள் நட்பு இருப்பதா நிறையப் பேர் நினைக்கலாம். உண்மையில் நான் வேறு! ரொம்ப அமைதியான, ஹோம்லி டைப். அதிகமா யாரோடயும் பேசக்கூட மாட்டேன். என்னுடைய இந்த உண்மையான குணம் என் நெருங்கிய நண்பர்களுக்கும் குடும்பத்துக்கும் மட்டும்தான் தெரியும்.''

ஆனா, போஜ்புரி நடிகருடன் கல்யாணம்வரை பேசப்பட்டீர்களே?

``அந்த மொழிப் படங்களின் வட்டாரம் ரொம்பச் சின்னது. ரெண்டே நடிகர்கள், நான் மட்டும்தான் நடிகை... தொடர்ந்து ஒரே நடிகருடன் நாலு படங்கள் நடித்தேன். உடனே கிசுகிசுக்கள் கிளம்பிடுச்சு அவ்வளவுதான்.''

இப்படியே தனியாகவே இருக்கப் போறீங்களா, லோன்லியா ஃபீல் பண்ணலையா?

``தனியா இருப்பது எனக்குப் பிடிச்சிருக்கு. எந்தளவு சர்ச்சைகள் வந்தாலும் என்னைத் தாங்கறதுக்கு அப்பா, அம்மா, தங்கைகள்னு குடும்பம் இருக்கு. கல்யாணம் செய்து குழந்தைகள் பிறந்தால்தான் குடும்பமா? இவங்கலாம் என் குடும்பம் கிடையாதா? இதுவரைக்கும் நான் சிங்கிள்தான்! இப்படியே இருக்கப்போறேனா, கல்யாணம் பண்ணிப்பேனா... எனக்கு எதுவும் தெரியாது. பார்க்கலாம்!'' என்கிறார், மெல்லிய புன்னகையுடன்.

நல்ல மாப்பிள்ளைக்கு காத்திருக்கிறார் போல..

 

kumudam