|
காதல் என்றால் என்ன? - திரை விமர்சனம்
May 22,2008 00:00
by
admin
நடிப்பு: வீரா, நீரஜ், சரண்ராஜ், தியா தயாரிப்பு: எம்.ராஜன் இயக்கம்: காளிமுத்து இசை: பாரதி.கே
ராக்கிங் செய்யும் வாலிபர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் சரண்ராஜிடம் புகார் செய்கிறார் தியா. அவரது அழகில் மயங்கும் சரண்ராஜ், அவரை வெறித்தனமாக காதலிக்கிறார். தனது அதிகாரத்தை பயன்படுத்தி திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி தியாவை வீட்டுச் சிறையில் வைக்கிறார். இந் நிலையில் ஹீரோ வீராவுக்கும் தியாவுக்கு காதல் தீயாக பற்றி எரிகிறது. சரண்ராஜை ஒழித்துகட்டிவிட்டு காதலியை வீரா எப்படி கை பிடிக்கிறார் என்பது கதை. கதையை ரொம்பவே ஆழமாக சிந்தித்துவிட்டு திரைக்கதையிலும், காட்சி அமைப்பிலும் கோட்டை விட்டிருக்கிறார் இயக்குனர். அடுத்து என்ன நடக்கும், அடுத்து யார் என்ன வசனம் பேசப்போகிறார்கள் என்பதை கூட யூகித்துவிடக்கூடிய திரைக்கதை. சரண்ராஜிடம் சம்பளம் வாங்கிக்கொண்டு அடியாள் ரேஞ்சுக்கு வேலை செய்யும் ஒட்டுமொத்த போலீசும், சரண்ராஜிடம் அடிவாங்கிவிட்டு பிறகு போனில் அவரை மிரட்டி பாவ்லாகாட்டும் ஹீரோவும், வீட்டு சிறையில் இருந்தாலும் எந்த கவலையும் இல்லாமல் பேப்பர், டி.வி என்று ஜாலியாக இருக்கும் தியாயும் சீரியஸ் காமெடி பண்ணியிருக்கிறார்கள். புதுமுகம் வீரா ஹீரோவாக பாசாகிறார். தியா தாராள கவர்ச்சி காட்டியிருக்கிறார். இரண்டு முறை ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்ததிலேயே காதல் பிறந்து, மூன்றாவது காட்சியில் முத்தம் என்று வளரும் கோடம்பாக்கத்து கெக்கே பிக்கே காதலை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அடியாளாக அறிமுகமாகி காதலுக்காக தியாகம் செய்கிறார் நீரஜ். கதையைவிட தியாவின் கவர்ச்சியையும், திரைக்தையை விட ரிஷாவின் உடலையும், வசனத்தை விட லக்ஷாவின் குத்தாட்டத்தையும் நம்பியிருக்கிறார்கள். பாரதி.கேயின் இசை பரவாயில்லை ரகம்.
|