|
சினிமாத்துறையில் நன்றியுள்ளவர்கள் குறைவு - அமீர்
Feb 24,2008 00:00
by
admin
உலகின் மிக முக்கியமான திரைப்பட விழாக்களுள் ஜெர்மனி தலைநகர் பெர்லினில் நடைபெறும் திரைப்பட விழாவும் ஒன்று. இந்த விழாவில் அமீர் இயக்கிய "பருத்தி வீரன்' படத்துக்கு சிறப்பு விருது கிடைத்துள்ளது. விருது பெற்று பெர்லினிலிருந்து திரும்பியுள்ள அமீர், வாழ்த்து மழையில் நனைந்து கொண்டிருக்கிறார். அவரை அவருடைய அலுவலகத்தில் சந்தித்தபோது... "ராம்' படத்துக்கு சைப்ரஸ் பட விழா விருது; "பருத்தி வீரன்' படத்துக்கு பெர்லின் விருது... எப்படி உணருகிறீர்கள்? திருப்தியாகவும் மனநிறைவாகவும் இருக்கிறது. "ராம்' படத்துக்கு நடிப்புக்கும் இசைக்கும் சைப்ரஸ் விருது கிடைத்தது. அதை விட "பருத்தி வீரன்' படத்துக்குக் கிடைத்த பெர்லின் விருது அதிக மகிழச்சியைத் தருகிறது. ஏனென்றால் உலக அளவில் 200 திரைப்பட விழாக்கள் நடந்தாலும் அதில் இரண்டாவது பெரிய விழா பெர்லின் பட விழாதான். விருதை மனதில் வைத்துதான் "பருத்தி வீரன்' எடுத்தீர்களா? கமர்ஷியல் ரீதியாக வெற்றி பெற வேண்டும் என்றுதான் படம் எடுத்தேன். விருதுக்காக எடுக்கவில்லை. சொல்ல வந்ததைச் சரியாக சொல்லியிருக்கிறோம். யதார்த்தமாகவும் எடுத்திருக்கிறோம் என்ற நம்பிக்கையில் படத்தை விருதுக்கு அனுப்பி வைத்தோம். கமர்ஷியலாகப் பெரும் வெற்றி பெற்ற படத்துக்கு விருதும் தேடி வருவது அதிக சந்தோஷமான விஷயம். விழா அனுபவம் குறித்து...? பெர்லின் திரைப்பட விழாவில் கலந்துகொள்ளும் படங்கள் வேறு திரைப்பட விழாவில் கலந்துகொண்டிருக்கக் கூடாது. இப்படி சில நிபந்தனைகள் உண்டு. பெர்லின் பட விழாவில் ஆசிய, ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த 3000 படங்கள் பங்கேற்றன. இந்தப் படங்களைப் போட்டி பிரிவு, பனோரமா பிரிவு, ஃபோரம் பிரிவு, டேலண்ட் பிரிவு என வரிசைப்படுத்துவார்கள். "பருத்தி வீரன்' படம் ஃபோரம் பிரிவில் கலந்துகொண்டது. 3000 படங்களில் 176 படங்கள் தேர்வு செய்யப்பட்டன. அதில் 36 படங்கள் ஃபோரம் பிரிவில் தேர்வு செய்யப்பட்டன. அதில் இந்தியாவிலிருந்து கலந்துகொண்ட ஒரே படம் "பருத்தி வீரன்'தான். அந்த 36 படங்களில் ஆசிய நாடுகளிலிருது சிறப்பு விருதுக்குத் தேர்வான படம் "பருத்தி வீரன்'தான். படங்களை எப்படித் தேர்வு செய்கிறார்கள்? படங்களை மூன்று பிரிவில் தனித் தனியாகப் பார்ப்பார்கள். முதலில் ஜூரி எனப்படும் தேர்வுக்குழுவினர் பார்ப்பார்கள். அடுத்து பத்திரிகையாளர்கள்; இறுதியாகப் பார்வையாளர்கள். நான் பத்திரிகையாளர்கள் பார்த்தபோது பெர்லின் சென்றேன். "பருத்தி வீரன்' திரையிட்ட பின் பல கேள்விகள் கேட்டனர். படத்தைப் பற்றி ஜெர்மனி பத்திரிகைகள் பெரிய அளவில் பாராட்டி எழுதியிருந்தன. அதனால் பார்வையாளர்களுக்கான நான்கு காட்சிகளும் ஹவுஸ்ஃபுல்லாக இருந்தன. சினிமாத் தொழில்நுட்பத்தை நேர்த்தியாகக் கையாள்வதற்குக் கலாசாரம் சார்ந்த கதையை அழகாகச் சொல்லிய படம் என்ற வகையில் "பருத்தி வீரனு'க்கு விருது கிடைத்தது. படத்தின் க்ளைமாக்ஸில் நம் ஊர் மக்கள் போலவே பெர்லின் மக்களும் அழுதனர். உலகம் முழுவதும் உணர்வு ஒன்றுதான் என்பதைப் புரிந்துகொண்டேன். "பருத்தி வீரன்' படத்தால் பணரீதியாகத் தங்களுக்கும் தயாரிப்பு தரப்பு, படத்தின் நாயகன் கார்த்தி ஆகியோருடன் மனஸ்தாபம் ஏற்பட்டது. இந்தச் சூழ்நிலையில் நீங்களும் கார்த்தியும் ஒன்றாகப் பட விழாவில் கலந்துகொண்டது குறித்து...? நான் பெர்லின் சென்ற பிறகே கார்த்தி அங்கு வந்தார். இருவரும் பேசிக்கொள்ளவில்லை என்றாலும் நிகழ்ச்சிகளில் ஒன்றாகத்தான் கலந்துகொண்டோம். ஒன்றாகவே பயணம் செய்தோம். கேள்வி-பதில் நேரத்தில் என்னுடைய பேச்சை கார்த்திதான் மொழிபெயர்த்தார். வேறு என்ன சொல்ல? மற்றபடி நாங்கள் இருவரும் சண்டைக்காரர்கள் இல்லையே. எங்களுக்கிடையே பேசுவதற்கு ஒன்றும் இல்லாததால் பேசவில்லை. "பருத்தி வீரன்' படத்தில் தனக்கு இன்னும் சம்பள பாக்கி வைத்திருப்பதாகவும் அவரைப் பற்றி நீங்கள் குறை கூறுவதாகவும் படத்தின் நாயகி ப்ரியாமணி உங்களைப் பற்றி கூறியுள்ளது பற்றி...? "யோகி' படத்தில் ப்ரியாமணியை கதாநாயகியாக நடிக்கக் கேட்டு அவர் மறுத்ததாகவும் அதனால் நான் அவரைப் பற்றி ""அரைகுறை ஆடை அணிந்து ஆடத்தான் ஆசைப்படுகிறார்; நல்ல கதைகளில் நடிக்க மறுக்கிறார்'' என்றெல்லாம் செய்திகள் வந்தன. உண்மையில் "யோகி' படத்தில் நடிக்க நான் அவரை அழைக்கவேயில்லை. ஒவ்வொருவருடைய உடலமைப்புக்கும் பாடி லாங்வேஜுக்கும் ஏற்ற உடைதான் "செட்' ஆகும். அதன்படி ப்ரியாமணிக்கு பாவாடை, தாவணி, சேலைதான் சரியாக இருக்கும் என்று கூறினேன். அது எப்படியெல்லாமோ பரவிவிட்டது. அதேபோல அவருக்கு சம்பள பாக்கி இருப்பது உண்மைதான். என்னுடைய அலுவலகத்துக்கு வந்து பெற்றுக்கொள்ளுமாறு பலமுறை சொல்லிவிட்டேன். தாயாருடன் வருவதாகக் கூறிய அவர் இதுவரை வரவேயில்லை. வந்தால் உடனடியாக "செட்டில்' செய்வேன். உங்கள் மூலம் சினிமாவில் நிலையான இடத்தைப் பெற்றவர்கள் உங்களுக்கு எதிராகவே திரும்புவதாக உணர்கிறீர்களா? யாரும் யாரையும் தூக்கி விட முடியாது. சில வழிமுறைகளை நாம் சொல்லலாம். அதன்பிறகு நிலைத்திருப்பதும் ஃபீல்டை விட்டுச் செல்வதும் அவரவர் திறமையைப் பொறுத்துதான். நான் சில புதுமுகங்களை அறிமுகப்படுத்தினேன் என்றால் நானும் ஒருவரால் அறிமுகப்படுத்தப்பட்டவன்தானே. தவிர, சினிமாத்துறையில் நன்றியுணர்ச்சியை எல்லாம் எதிர்பார்க்க முடியாது. முன்பெல்லாம் ஒரு படம் தோல்வியடைந்தால் உடனே அதே நிறுவனத்துக்கு சம்பந்தப்பட்ட நடிகர்கள் தேதி ஒதுக்கி இன்னொரு படம் செய்துதருவார்கள். அதெல்லாம் கமல், ரஜினியோடு முடிந்துவிட்டது. இப்போது இங்கே ஒரு படம் தோற்றாலும் அடுத்து ஹீரோவின் சம்பளம் ஏறிக்கொண்டுதான் இருக்கிறது. கமல், ரஜினி ஆகியோரை சில முறை சந்தித்துப் பேசியிருக்கிறேன். அந்த ஒவ்வொரு முறையும் கமலும் ரஜினியும் குறைந்தது பத்து நிமிடங்களாவது கே.பாலசந்தரைப் பற்றி உயர்வாகப் பேசிக் கொண்டே இருந்தார்கள். அந்த நன்றியுணர்ச்சி திரையுலகில் குறைவு. நீங்கள் கதாநாயகனாக நடிக்கும் "யோகி' பற்றி...? படத்தில் காதல் இருக்கிறது; பாடல் இருக்கிறது; சண்டை இருக்கிறது; நகைச்சுவை இருக்கிறது. ஆனால் இவையெல்லாம் வழக்கமான பாணியில் அமையாமல் வித்தியாசமாக இருக்கும்.
|