தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், நடிகை சரோஜாதேவிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும், நடிகை பிரியாமணிக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் வழங்கி கெளரவித்தார் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல்.
54-வது தேசிய திரைப்பட விருதுகள் கடந்த மாதம் அறிவிக்கப்பட்டன. இந்த விருதுகள் வழங்கும் விழா தில்லி விஞ்ஞான் பவனில் நடைபெற்றது. விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவருக்கும் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் விருது வழங்கி கெளரவித்தார்.
பாலிவுட் நடிகர் திலிப் குமாருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை பிரதிபா பாட்டீல் வழங்கியபோது விழா அரங்கம் முழுவதும் பலத்த கரகோஷம் எழுந்தது. முன்னா பாய் படத்தில் சிறப்பாக நடித்ததற்தாக சஞ்சய் தத்துக்கும் விருது வழங்கப்பட்டது.
வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற நடிகை சரோஜாதேவி
வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற ஹிந்தி நடிகர் திலிப் குமார்
இந்திய திரை உலகுக்கு சிறந்த சேவை புரிந்தமைக்காக வழங்கப்படும் தாதாசாஹிப் பால்கே விருது தபன் சின்ஹாவுக்கும், வாழ்நாள் சாதனையாளர் விருது லதா மங்கேஷ்கருக்கும், சிறந்த இயக்குநருக்கான விருது மதுகர் பாந்தர்கருக்கும், சிறந்த நடிகருக்கான தேசிய விருது வங்காள நடிகர் செüமித்ரா சாட்டர்ஜிக்கும் வழங்கப்பட்டன.
விருது பெற்ற சிறந்த குழந்தை நட்சத்திரம் திவ்யா சபாத்கர், சிறந்த நடிகர் சவுமித்ர சட்டர்ஜி (வலமிருந்து 2வது) ஆகியோருடன் பிரியாமணி.
சிறந்த திரைப்படத்துக்கான விருது புலிஜனனம் (மலையாளம்), சிறந்த இசையமைப்பாளருக்கான விருது அசோக் பாட்கி (கொங்கனி), சிறந்த ஒளிப்பதிவாளர் விருது கெüதம் கோஷ் (யாத்ரா-ஹிந்தி), சிறந்த குழந்தை நட்சத்திர விருது திவ்யா சாஹத்கர் (அந்தர்நாட்- கொங்கனி படம்) ஆகியோருக்கும் வழங்கப்பட்டன.
இவ்விழாவில் மத்திய செய்தி-ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி உள்ளிட்ட பல்வேறு மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உயர் அதிகாரிகள், திரையுலக பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.