புராஜெக்ட் ஈஸ்ட் வெஸ்ட் -ஏ பட நிறுவனம் தயாரிப்பில் பிரசன்னா-சினேகா நடிக்கும் "அச்சமுண்டு அச்சமுண்டு' படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது.
அமெரிக்காவின் நியூஜெர்சி, நியூயார்க் நகரங்களில் 28 நாள்களில் ஹாலிவுட் தொழில்நுட்பக் கலைஞர்களைக் கொண்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.
இதில் "எம்மி' விருது பெற்ற பிரபல ஹாலிவுட் நடிகர் ஜான் ஷே வில்லனாக நடித்துள்ளார். இந்தப் படத்துக்காக முதல்முறையாக "ரெட் ஒன்' என்ற அதி நவீன கேமரா பயன்படுத்தப்பட்டுள்ளது. ஃபிலிம் ரோல்கள் இல்லாமல் ஹார்டு டிஸ்க்கில் காட்சிகளைப் பதிவு செய்வதால் படம் திரையில் மிகத் துல்லியாகத் தெரியும். இந்த கேமராவைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ள முதல் இந்தியத் திரைப்படம் இதுதான்.
கமல்ஹாசன் தன்னுடைய "மர்மயோகி' படத்தில் இதே வகை கேமராவைப் பயன்படுத்துகிறார். இந்தக் கேமராவைப் பயன்படுத்த விரும்பி பதிவு செய்தால் கிட்டத்தட்ட ஒரு வருடக் காத்திருப்புக்குப் பிறகே கேமரா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
அருண் வைத்தியநாதன், ஆனந்த் கோவிந்தன், ஆஸ்மா ஹாஷ்மி, சீனிவாசன், ரம்ஜான் லக்கானி ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள "அச்சமுண்டு அச்சமுண்டு' படத்தில் ஹாலிவுட் தொழில்நுட்பக் கலைஞர்களே அதிக எண்ணிக்கையில் பணியாற்றியுள்ளனர்.
நவீன உத்திகளைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இந்த க்ரைம்-த்ரில்லர் படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருப்பவர் அருண் வைத்யநாதன்.
இசை -கார்த்திக்ராஜா. பாடல்கள் -பழனிபாரதி, ஆண்டாள் பிரியதர்ஷினி. ஒளிப்பதிவு -கிறிஸ்ஃப்ரிலிச். கலை -எலிஸபத் ஜோன்ஸ். சண்டைப் பயிற்சி -இயான் மெக்ஹாஹின். படத்தொகுப்பு -என்.பி.சதீஷ்.