நடிப்பு: ரதீஷ், சோனா, எம்.எஸ்.பாஸ்கர்
இயக்கம்: ராஜ்மோகன்
தயாரிப்பு: ஸ்ரீவெங்கடாசலபதி பிலிம்ஸ்
இசை: ஹித்தேஷ்
உறவினர் வீட்டு திருமணத்துக்காக கிராமத்துக்கு செல்லும் ஹீரோ ரதீசுக்கு, கிராமத்து ஹீரோயின் சோனாவை பார்த்ததும் காதல். அவரை திருமணம் செய்ய பெண் கேட்டு வந்த இடத்தில் அங்கு வேறொரு பெண்ணை காட்டுகிறார்கள். தான் பார்த்த பெண் இவள் இல்லை என்று பட்டணத்துக்கே திரும்பி விடுகிறார்.
கிராமத்தில் பார்த்த சோனாவை சென்னையில் அடிக்கடி பார்க்கிறார். அவரை சந்தித்து பேச முடியாமல் சூழ்நிலை தடுக்கிறது. அப்பா அம்மா வேறொரு பெண்ணை பார்க்க, அந்த பெண் சோனாவாக இருக்க, இது தெரியாமல் அவர் திருமணத்துக்கு மறுக்க, இப்படியே இருவரும் சேர முடியாமல் போகிறது.
கிளைமாக்ஸில் சோனாவைச் சந்திக்கும் ரதீஷ், அவரது கழுத்தில் தொங்கும் தாலியைப் பார்த்து அதிர்கிறார். ராணுவ மேஜர் ராஜ்மோகனை திடீர் திருமணம் செய்த சோனாவிடம் காதலைச் சொல்ல முடியாமல் தவிக்கும் ரதீஷ், என்ன முடிவு எடுத்தார் என்பது கதை.
எம்.எஸ்.பாஸ்கர் அன்ட் காமெடி கோஷ்டியைத் தவிர, படத்தில் நடித்த எல்லோருமே புதுமுகங்கள். ஹீரோயின் சோனா, நடிப்பில் காட்ட வேண்டிய கனத்தை உடம்பில் மட்டும் காட்டியிருக்கிறார். ஹீரோ ரதீஷ், ராணுவ மேஜர் ராஜ்மோகன் மனதில் இடம்பிடிக்க முயற்சித்துள்ளனர். ஹித்தேஷ் இசையில் பாடல்கள் பரவாயில்லை.
துரை கே.வெங்கட்டின் ஒளிப்பதிவு, சில காட்சிகளில் டல், சில காட்சிகளில் ஜில். டீ கிளாஸில் சரக்கு ஊற்றி வைத்துவிட்டு, அதைக் குடிக்க எம்.எஸ்.பாஸ்கர் படும் அவஸ்தையும், டீக்கடைப் பையன் வந்து, ‘டிக்காஷனை கீழே ஊத்த வேண்டியதுதானே’ என்று கிளாஸைத் தூக்கி எறிந்துவிட்டுச் செல்வதும் கலகல.
‘ஊர்ல ஒரு ஓட்டுல தோத்தவன் நான்’ என்று சொல்லிக்கொண்டு திரியும் நெல்லை சிவா காமெடி ஓ.கே. அழுத்தமான காட்சியமைப்புகள் இல்லாமல், பழைய படம் பார்க்கும் உணர்வை தருவது மைனஸ்.