நடிப்பு: பரத், மீரா ஜாஸ்மின், பிரேம், கோவிந்த் நாம்தேவ்.
தயாரிப்பு: ராம.சரவணன்.
இசை: ஸ்ரீகாந்த் தேவா.
இயக்கம் : வி.இசட்.துரை.
விமர்சனம்
ஐ.டி.கம்பெனியில் பணிபுரியும் பரத், ஊட்டியில் மீரா ஜாஸ்மினை சந்திக்கிறார்.
கண்டதும் காதல். மீராவின் அப்பா எதிர்ப்பு தெரிவிக்கிறார். வீட்டைவிட்டு
வெளியேறும் மீரா, பரத்தை பதிவு திருமணம் செய்கிறார்.
மகளை அழைத்துச் செல்ல சப்&இன்ஸ்பெக்டர் ராஜா ரவீந்தருடன் வருகிறார்
மீராவின் அப்பா. அவருடன் செல்ல மறுக்கிறார் மீரா. அவரது அழகில் மயங்கும்
ராஜா ரவீந்தர் எப்படியாவது மீராவை அடைய முயல்கிறார். இந்தப் போராட்டத்தில்
கொல்லப்படுகிறார் மீரா. இதனால் சப்-இன்ஸ்பெக்டரை கொலை செய்கிறார் பரத்.
அடுத்தடுத்து ஆட்களை குறிவைத்து முன்பே போலீசுக்கு தகவல் கொடுத்து
விட்டு, நேரம் காலம் குறித்து கொலை செய்கிறார் நேபாளி பரத். சிறையில் 6
வருட தண்டனை கைதியாக இருக்கும் பரத், அடிக்கடி தற்கொலைக்கு
முயற்சிக்கிறார்.
இந்த மூன்று பரத்தும் கடைசியில் இணைய, சஸ்பென்ஸ் கிளைமாக்ஸோடு
பரபரப்பாக முடிகிறது படம்.
கதை சொல்லும் ஸ்டைலும் பரத் கொலை செய்யும் ஸ்டைலும் புதுசு.
கிளைமாக்ஸ் வரை மூன்று பரத்தையும் வெவ்வேறு நபர்களாக காட்டுகிறார்
இயக்குனர் துரை. ரொமான்ஸ், விரக்தி, சைக்கோ என மூன்று வித நடிப்பில்
மிரட்டுகிறார் பரத்.
இமைகளை விட்டு உயரத்திலிருக்கும் புருவம், திக்குவாய் போல வார்த்தைகளை
இழுத்து பேசும் ஸ்டைல், ஊனமுற்றவர்போல் சாய்ந்த நடை என மாறுபட்ட
நேபாளியை கண்முன் நிறுத்துகிறார். சத்தமில்லாமல் அவர் செய்யும் கொலைகள்
நடுங்க வைக்கிறது.
ஒவ்வொரு கொலை செய்யும்போதும் அந்த நபரின் போட்டோவை போலீசுக்கு
அனுப்பி முடிந்தால் தடுத்துக்கொள்ளுங்கள் என்று பரத் சவால் விடுவதும்,
எப்படியாவது கொலையை தடுக்க வேண்டும் என்று போலீஸ் அதிகாரி பிரேம்,
பட்டாளத்தை திரட்டிக்கொண்டு வந்து சுற்றிவளைப்பதும் அடுத்து என்ன
நடக்குமோ என்ற படபடப்பை ஏற்படுத்துகிறது.
தாவணி, சேலையுடன் குடும்ப பாங்காக வந்த மீரா, கவர்ச்சியில் சென்டம்
வாங்கி இருக்கிறார். போலீஸ் உடையில் வில்லத்தனம் செய்யும் ஜெயிலர்
சேரன்ராஜ், கைதி நேபாளியான கோவிந்த் நாம் தேவ், பரத்தை பின்தொடரும்
போலீஸ் அதிகாரி பிரேம் மனதில் நிற்கின்றனர்.
சஸ்பென்ஸாக கதையை சொல்ல வேண்டும் என்று மெனக்கெட்டிருக்கும்
இயக்குனர் துரை, ஹாலிவுட் பாணி பரபரப்பை கோலிவுட்டுக்கு கொண்டு
வந்திருக்கிறார். பரத் பற்றிய சஸ்பென்ஸை உடைக்கும் வரை குழப்பத்திலேயே
கதை நகர்ந்தாலும், மூன்று பரத்துக்கும் உள்ள தொடர்பு என்ன என்பதை
அறிவதற்கான ஆவல் அதிகரிக்கிறது.
கஞ்சா வழக்கில் சிறைக்கு வரும் வயதான நேபாளி யார்? அவரது பின்னணி
என்ன? என்பதை ஒன்றிரண்டு டயலாக்கில் மட்டுமே முடிக்காமல் சீன்களாகவும்
காட்டி விளக்கி இருக்கலாம்.
நேபாளியை தாக்கும் ஜெயிலர் அடிக்கடி எந்த பெரும்புள்ளியுடன் பேசுகிறார்
என்பதிலும் தெளிவில்லை. வித்யாகர் பட்டின் மேக் அப்பும், மதியின்
ஒளிப்பதிவும் படத்துக்கு பலம். ஸ்ரீகாந்த் தேவாவின் பின்னணி இசை
மிரட்டுகிறது.