ரஜினி ரசிகர்மன்ற தலைவராக பொறுப்பு வகித்தவர் சத்திய நாராயணா. கடந்த 25 ஆண்டுகளாக அவர் இப்பதவியில் இருந்தார்.
கடந்த சில மாதங்களாக சத்தியநாராயணா மீது ரசிகர்கள் அதிருப்தியை அடைந்தனர். ரஜினியை சந்திக்க ஏற்பாடு செய்யவில்லை என்றும் ரசிகர்களின் உணர்வுகளை ரஜினிக்கு தெரிவிக்க தவறிவிட்டார் என்றும் குறை கூறப்பட்டன.
சத்தியநாராயணாவின் செயல்பாடுகள் பற்றி சமீபத்தில் ரசிகர்களை ரஜினி சந்தித்த போது அவர் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது சத்திய நாராயணாவுக்கு உடல்நிலை சரியில்லை என்று ரஜினி கூறினார். ரசிகர்கள் ராகவேந்திரா மண்டபத்துக்கு டெலிபோன்செய்து தகவல்கள் தெரிவிக்கலாம் என்றும் கூறினர்.
இந்த நிலையில் ரசிகர்மன்ற தலைவர் பொறுப்பில் இருந்து சத்தியநாராயணா அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதில் புதிய தலைவராக சுதாகர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ரஜினியின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.
ரசிகர்களை ரஜினி சந்தித்து பேசிய போது சுதாகர்தான் ரசிகர்களின் கேள்விகளை சேகரித்து மைக்கில் படித்தார். அப்போது சுதாகரை ரஜினி அறிமுகம் செய்து வைத்து பேசியபோது இவன் என் நண்பன். சுதாகர் பிலிம் இன்ஸ்டிடிïட்டில் என்னோடு ஒன்றாக படிச்சான். பிறகு டி.வி. ஆக்டிங், குடும்பம்னு செட்டில் ஆயிட்டான். நண்பர்கள் எல்லோரும் ஒன்றாக இருந்தோம். நீயும் வா என்றேன். வந்துட்டான் ரொம்ப திறமைசாலி என்று குறிப்பிட்டார்.
ரஜினி பழைய நண்பர்களை அருகிலேயே வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பஸ் கண்டக்டராக இருந்த போது அதே பஸ்சில் டிரைவராக பணியாற்றிய பகதூர் மற்றும் விட்டல், முரளி, நட்ராஜ் ஆகியோர் ரஜினியுடன் இருக்கிறார்கள்.
முரளி கல்யாண மண்டபத்தை கவனிக்கிறார். நட்ராஜ், வள்ளி, அன்புள்ள ரஜினிகாந்த் படங்களை இயக்கியவர் குணசித்திர நடிகராகவும் நடித்துள்ளார்.
ரஜினி அரசியலில் ஈடுபடவேண்டும் என்று ரசிகர்கள் வற்புறுத்திவரும் நிலையில் ரசிகர் மன்ற தலைவர்மாற்றப்பட்டது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஆண்டவன் நினைத்தால் நாளைக்கே அரசியலில் ஈடுபடுவேன் என்று கூறி இருந்தார். அர சியல் பிரவேசத்துக்காக இந்த அதிரடிமாற்றம் என்று ரசிகர்கள் கூறுகின்றனர்.