'கதைக்காக ஹீரோவை தேர்வு செய்யும் விக்ரமன், எனக்காக 'மரியாதை' படத்தின் கதையை உருவாக்கினார்' என்றார் விஜயகாந்த்.
அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா தயாரிக்கும் படம் 'மரியாதை'. விக்ரமன் இயக்குகிறார். விஜய் ஆண்டனி இசை. விஜயகாந்த் ஹீரோவாகவும், இவருக்கு ஜோடியாக மீனா, மீரா ஜாஸ்மின் நடிக்கின்றனர். இதன் தொடக்க விழா சென்னையில் நேற்று நடந்தது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம நாராயணன், பிரமீட் சாய்மீரா சாமிநாதன் தொடங்கி வைத்தனர். பிறகு விஜயகாந்த் பேசியதாவது:
டைரக்டர் விக்ரமன் எப்போதும் கதை எழுதிவிட்டு அதற்கேற்ற ஹீரோவை தேர்வு செய்வார். இதை அவரே பேட்டியில் கூறி இருக்கிறார், 'மரியாதை' பட கதையை எனக்காக எழுதியதாக என்னிடம் கூறினார். அதனாலேயே நான் நடிக்கவிருந்த 'விருதகிரி' படப்பிடிப்பை தள்ளிவைத்துவிட்டு இதில் நடிக்கிறேன்.
'வானத்தைப் போல படத்தில் சண்டை காட்சி இல்லை. ரொம்ப சாதுவாக காட்டி விட்டேனோ என்ற வருத்தம் இருக்கிறது. எனவே இதில் சண்டை காட்சி இருக்கிறது' என்றார் விக்ரமன். படப்பிடிப்பு தொடங்கிய பிறகு வேடத்தை மெருகேற்றிக்கொண்டே இருப்பார். அதற்காக ரீ ஷ¨ட் செய்ததில்லை. இதில் மீரா, மீனா, அம்பிகா என 3 பேருடன் போட்டிபோட்டு நான் நடிக்க வேண்டும்.
இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.
'வானத்தைப் போல படத்திற்கு ஜனாதிபதி விருது கிடைத்தது. விஜயகாந்த்துக்கும் விருது கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன். அரசியல் காரணமாக கிடைக்கவில்லை. ‘மரியாதை’ படத்தில் அவரது நடிப்புக்கு நிச்சயம் தேசிய விருது கிடைக்கும்' என்றார் டைரக்டர் விக்ரமன்.
விழாவில் சன் பிக்சர்ஸ் தலைமை செயல் அதிகாரி சக்ஸேனா, கலைப்புலி எஸ்.தாணு, காஜா மைதீன், சிவசக்தி பாண்டியன், அன்பாலயா பிரபாகரன், இப்ராகிம் ராவுத்தர், எல்.கே.சுதீஷ், வெங்கட் பிரபு, அமீர், விஜய் ஆண்டனி, மீனா, மீரா ஜாஸ்மின், அம்பிகா, சந்தியா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.